அபகரிக்கப்பட்ட வெள்ளிமலை பிள்ளையார் ஆலய வயற்காணியை பெற்றுத்தரவும் :ஆலய பரிபாலனசபை கோரிக்கை!

IMG 6294 1
IMG 6294 1

மட்டக்களப்பு பொலன்னறுவை  எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான வயற்காணியை முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் வயல் காணியை மீட்டுத் தருமாறு ஆலய பரிபாலனசபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆலய பரிபாலனசபை தலைவர் சுதாகரன், செயலாளர் சிவம், பிரதி தலைவர், நிசங்க ஆலய குரு உதயன்குருக்கள் உட்பட பரிபாலன சபையினர் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

குறித்த ஆலய புனர்நிர்மான மற்றும் ஆலயத்திற்கான வீதி அபிவிருத்தி மின்சாரம் தொடர்பான ஆலய பரிபாலனசபையினர்   சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த நிலையில் ஆலயத்தின் காணி அபகரிப்பு தொடர்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெறப்போவதாக ஆலயத்துக்கு செல்லும் வீதிகளில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு ஆலயத்திற்கு செல்ல வந்த தேரர் உட்பட ஆலய நிர்வாகத்தினரை செல்ல அனுமதிக்கவில்லை    

இந்த ஆலயம் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டதுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் முதல் முதல் பதிவு செய்யப்பட்ட ஆலயமாகும். இருந்தபோதும் இந்த ஆலயத்தில்  ஊத்துச்சேனை, சிறிஓடை, கள்ளிச்சி ஓடை, குமாரபுர, வடமுனை ஆகிய 5 கிராமங்களில் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 1990 ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தினால்  தமிழ்மக்கள் தமது காணிகள் வீடுகளை விட்டு வெளியேறி வாழைச்சேனைக்கும் சிங்களமக்கள் வெலிகந்தைக்கும் இடம் பெயர்ந்தனர்.

இதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் மக்கள் சென்று பராமரிக்க முடியாத நிலையினையடுத்து ஆலய கூரைகள் உடைந்து பாரிய சேதமடைந்தது இதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ம் ஆண்டு மக்கள் மீண்டும் குடியேறிய நிலையில் ஆலயத்திற்கு செல்லும் வீதி மக்கள் பிரயாணிக்க முடியாதளவு சேதமடைந்துள்ளதுடன் காடுகள் வளர்ந்துள்ளது.

ஆலயத்திற்கு முன்னாள்  உள்ள ஆற்றிற்கு மறு பக்கம் 1926 ம் ஆண்டு வழங்கப்பட்ட காணி உறுதியுடனான  21 ஏக்கர் வயல்காணியாகும் இந்த காணியை 2010 ம் ஆண்டு முஸ்லீம் இனத்தச் சேர்ந்த ஒருவர் தனது காணி என காணி பத்திரத்தை கொண்டு அபகரித்து வேளாண்மை செய்து வருகின்றார்.

இந்த ஆலயத்திற்கு சொந்தமான காணியை பெற்றுத்தருமாறு கிரான் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தோம் அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை அதேவேளை கடந்த மாதம் அந்த வயல்காணியை ஆலய நிர்வாகம் வேளாண்மை செய்வதற்காக உழுது நெல்லை பயிரிட்டு 21 நாட்களின்  பின்னர் குறித்த நபர் உழவு இயந்திரம் கொண்டு அந்த வேளாண்மை பயிரை உழுது அழித்துள்ளனர்.

எனவே ஆலயத்திற்கு சொந்தமான இந்த வயல்காணியை உரிய அதிகாரிகள் பெற்றுத்தரவேண்டும் என ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.