பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டாளர் காசிநாதர் ஜெயராஜாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
எனினும் தடுப்பூசி பெறுவதில் பலரும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. பைசர் தடுப்பூசியா செலுத்துகின்றனர் என கேள்வியை எழுப்பினார்களே தவிர சினோபாம் ஊசி என்றவுடன் பின்னடித்தனர்.
இன்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 6 தடுப்பூசிகளில் சினோபாமும் உள்ளடங்குகின்றது. எனவே பல நாடுகளுக்கு செல்வதற்கான அனுமதி சினோபாம் ஊசி ஏற்றியவர்களுக்கும் அனுமதி உண்டு. எனினும் அதனை சிலர் உணர்கின்றதாக தெரியவில்லை.
இன்று தடுப்பூசி பெற்றவர்களின் இறப்பு வீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியை பெற ஆர்வம் காட்டவேண்டும்.
அத்துடன் மக்கள் கொரோனா காலத்தில் சமூகத்தில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.