கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்று முதல் இந் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இரண்டு மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு முன்னதாக தெரிவித்துள்ளது.
இன்று ஆரம்பிக்கப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் தகுதியுடைய பிரஜைகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று சுகாதார பிரிவுகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முப்படைகள், காவற்துறை, விமான நிலையம் மற்றும் துறைமுக அதிகாரிகள் உட்பட மருத்துவ ஊழியர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் சுற்றுலா தொழில் ஊழியர்களுக்கு முதலில் பைசர் தடுப்பூசி பூஸ்டர் டோஸாக செலுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதன் பின்னர் இது 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர டோஸ் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 30-60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும், வேறு நோய்கள் உள்ளவர்களுக்கும் இது வழங்கப்படும்.
இறுதியாக 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.