காலி, ஊருகஸ்மங்சந்தி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கருவலகொட பிரதேசத்தில், இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதலில் ஒருவர் மரணமடைந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மடக்கும்புர, கரன்தெனிய பிரதேசத்தை சேரந்த 51 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், துப்பாக்கியுடன் மற்றுமொருவரை அழைத்துக்கொண்டு களுவலகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு சென்று துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து வீட்டிலிருந்த நபர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் மீதும் அவருடன் சென்ற நபர் மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் மரணமடைந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.