வாரியபொல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 19 பேர் பதவி விலக தீர்மானித்துள்ளனர்.
தாம் பதவி விலகுவது தொடர்பான கடிதத்தை இன்றைய தினம் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பிரதேச சபை தவிசாளர் திலகரத்ன பண்டார திஸாநாயக்க மீது முன்வைத்துள்ள போலி குற்றச்சாட்டையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு தாம் பதவி விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமுள்ள வாரியபொல பிரதேச சபையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 23 பேரும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், உப தவிசாளர் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நால்வர், தவிசாளர் பதவி நீக்கத்துக்கு ஆதரவளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.