மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இரண்டாவது மீனவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் படகொன்றில் பயணித்துள்ளனர்.
இதன்போது, மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.
குறித்த நபர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட மற்றுமொருவரும் கடலில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் இருந்த ஒருவர் மாத்திரம் பிரதேச மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தார்.
காணாமல் போன ஏனைய இரண்டு பேரில் ஒருவர் நேற்றை தினம் சடலமாகவும் மற்றயவர் இன்றைய தினம் சடலமாகவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.