யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 135 இந்தியப் படகுகள் இன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இதன்போது 48 அடி நீளமான படகொன்று அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த படகு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையானது.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையகத்தின் அதிகாரிகளால் காரைநகரில் இந்த ஏலம் நடத்தப்பட்டது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபா பணத்தை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர்.
இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்ளுக்குச் சொந்தமான குறித்த மீன்பிடிப் படகுகள் இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஏலத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த படகுகளை கடந்த ஒருவாரமாக பெருமளவானோர் பார்வையிட்டிருந்த அதேவேளை, இன்றைய தினமும் பலர் அவற்றை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.