தற்போது பதிவாகி வரும் கொவிட் நோயாளர்களை கருத்தில் கொண்டு 7000 கட்டில்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரொன் திரிபு தொற்றுக்குள்ளானவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு வருவதன் காரணமாக தற்பொழுது இடைநிலை பராமரிப்பு மத்திய நிலையங்களின் தேவைப்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொது போக்குவரத்துகளில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் இடைவெளியை முறையாக பின்பற்ற தவறும் சந்தர்ப்பங்களில், முகக்கவசங்களை முறையாக அணிதல் மற்றும் கைகளில் தொற்றுநீக்கியை பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை கட்டாயமாக கடைபிடிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் சுகாதார வழிமுறைகளை பின்பவற்றுதிலிருந்து தவறும் பட்சத்தில் தொற்று நோய் மேலும் தீவிரடையும் நிலை காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட நபர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
சமூகத்தில் கொவிட் தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்படும் நபர்களை விட அறிகுறிகள் தென்படாத நபர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருவதன் காரணமாக அனைவரும் ஒரே மாதிரியான சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.