ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை (04.04) முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம்பெற்றதுடன், போராட்டகாரர் ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரம் ஏ9 வீதியை மறித்து போராடிய அவர்கள் பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தாது பின்னர் பிரதான வீதியில் இருந்து விலகிச் சென்று வீதியோரத்தில் நின்று கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அப் பகுதியில் நின்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் மது போதையில் போராட்டகாரர் மீது அருகில் இருந்த வெற்றிலைக் கடையில் இருந்து பெட்டி ஒன்றை தூக்கி வீசியிருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அவருடன் முரண்பட்ட போது குறித்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடியிருந்தார். பின்னர் குறித்த நபர் மீள அங்கு வந்த போது அவரை முற்றுகையிட்ட போராட்டகாரர் அவரை கடுமையாக எச்சரித்தும் இருந்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. இவ் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களும், சிங்கள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.