சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்க முயன்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

4 airport 4
4 airport 4

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​அவுஸ்திரேலியா கடற்கரையில், குறித்த படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, அவு​ஸ்திரேலிய எல்லைக் பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து,  குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டு விமானப்படையின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 அளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையர்களுடன் பெருமளவான அவுஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள் குழு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.