நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்துக்கமைய, கடந்த 2021 ஜூலை 7 ஆம் திகதி நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டேன்.
பதவி காலத்தில் நாட்டிற்கு ஏற்ற திட்டங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்த்திருந்தேன். அது இயலாமல் போயிருந்தது. மக்களின் எதிர்ப்பினை அடுத்து பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுடன் நானும் பதவி விலகினேன்.
நாட்டில் டொலரின் கையிருப்பு தாம் பதவியேற்றதன் பின்னர் இல்லாது செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கின்றேன்.
தானும் கடுமையான சூழலிலேயே நிதியமைச்சராக பொறுப்பேற்றிருந்தேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவுசெய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தாம் பதவி விலகுவதாக தெரிவித்தார்.
அவசியம் ஏற்படின் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.