வவுனியாவில் 103உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1580 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்தவாரம் முற்றுப்பெற்றது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த 53 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களை சேர்ந்த 1580 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில் அவர்களை தெரிவு செய்வதற்காக126915 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளர்.
குறிப்பாக வவுனியா மாநகரசபையில் 20846 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேசசபையில் 14533 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபையில் 11417 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் 61647 வாக்காளர்களும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையில் 18472 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட தேரதல் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது