கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சீனப் பெண், இன்று (19) வைத்தியசாலையிலிருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பூரண குணமடைந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர், சீனாவுக்கு செல்லவுள்ளதாக தொற்றுநோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த சீனப் பெண்ணின் உடலிலிருந்து வைரஸ் முற்றாக நீங்கியுள்ளதா என்பது தொடர்பில் அறிவதற்காக போதியளவிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த பெண்ணின் உடலில் இல்லை என பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான குறித்த பெண், இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி கொரனோ வைரஸ் அறிகுறி காரணமாக பரிசோதனை மேற்கொண்ட நிலையில் குறித்த சீனப் பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.