இந்தியாவிலே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாமி ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்தவர்களைப் பற்றி புகார் தெரிவித்ததால் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உயிருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக போராட்டம் நடத்தினார்.
வழக்கறிஞர் சாமி தனது மனுவில்,
“தற்போது நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். அதே நேரத்தில் பள்ளிக் காலம் முதல் இன்று வரை 20 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறேன்.நான் ஒரு சமூக ஆர்வலராக இருக்கிறேன். அதற்கான சான்றுகளையும் அளித்துள்ளேன். என்னுடைய வழக்கறிஞர் பணி மற்றும் சமூக சேவை காரணமாக 6 வகையான அடியாட்கள் குழுக்கள், ரௌடிகள், என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கொல்லப்படலாம். அதனால், தனக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். வழக்கறிஞர் சாமியின் இந்த திடீர் நிர்வாணப் போராட்டத்தால் உச்ச நீதிமன்ற வளாகம் பரபரப்புக்குள்ளானது.