கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கைகளை சவர்காரமிட்டு கழுவி சுத்தப்படுத்தும் நடைமுறை தற்போது தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தொடுகையற்ற முறையில் ‘சென்சர் கட்டுப்படுத்தி’ முறைமை கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் இயந்திரம் ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ஜலால்தீன் சாத் என்ற மாணவன் கண்டுபிடித்து பாடசாலை ஒன்றுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
சாதாரணமாக கைகளை கழுவும் போது நீர்குழாய்களை கைகளால் திறந்தே பயன்படுத்தி வருகிறோம். எனினும் இதற்கு மாற்றமாக தொடுகையற்ற முறையில் கைகளை கழுவும் முறையை இவர் கண்டு பிடித்துள்ளார்.
நீர் குழாய்களுக்கு அருகில் சென்றால் தானாகவே இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான இந்த கைகழுவும் இயந்திரத்தை பாடசாலைகளில் பயன்படுத்துவதன் ஊடாக கொரோனா தொற்றுநோய் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை இல்லாமல் செய்வதுடன் பாதுகாப்பான சூழலையும் உருவாக்க முடியும் என கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள இந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள இந்த மாணவனின் முயற்சியை சமூக மட்டத்திலுள்ள பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.