அரச வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணை!

3

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி 11 அரச வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு வாகனங்கள் மாத்திரம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை மார்ச் 02 ஆம் திகதிக்குள் அரச வாகனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சக்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினம் அந்த அமைச்சர்கள் அவ்வாறு வாகனங்களை ஒப்படைக்கத் தவறியுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசிப்பிரியவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் சட்டங்களை மீறி அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அவற்றை பறிமுதல் செய்யவும் தேர்தல் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.