எதிர்வரும் பொது தேர்தலுக்காக ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொது தேர்தலுக்கான வாக்களிப்பு 12 ஆயிரத்து 985 நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
குறித்த வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார முறைமைகளுக்கு அமைய தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட 71 நிலையங்கள் ஊடாக நாளைய தினம் விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் நிலவரம் தொடர்பில் அந்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுமார் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 100 பேர் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்த வாக்காளர் தொகையிலும் பார்க்க இந்த முறை புதிதாக 17,240 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 13 தேர்தல் தொகுதிகளுக்காக 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கமைய ஒரு கட்சிக்கு 15 வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 12 அரசியல் கட்சிகளும், 17 சுயேட்சைக் குழுக்களும் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 435 வேட்பாளர்களில் 60 முஸ்லிம் வேட்பாளர்களும் 31 தமிழ் வேட்பாளர்களும் அடங்கியுள்ளனர்.
கண்டி, ஹாரிஸ்பத்துவ, கலகெதர, பாத்ததும்பர, உடதும்பர, தெல்தெனிய, குண்டசாலை, செங்கடகல, ஹேவாஹெட்ட, கம்பளை, நாவலப்பிட்டி, யட்டிநுவர, உடுநுவர ஆகிய 13 தேர்தல் தொகுதிகள் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன.