இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள திரைக் கலைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிங் பேய் படத்தில் நடித்த பிரபல ஜப்பானிய நடிகை ஞாயிறன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் இந்த ஆண்டு ஏகப்பட்ட மரணங்கள் நடைபெற்று வருவது ரசிகர்கள் மற்றும் ஜப்பானிய திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
ரிங், மிஸ் ஷெர்லாக், பி வித் யூ, ஸ்ட்ராபெர்ரி நைட், பிரைட், க்ரீப்பி, மிட் நைட் ஈகிள் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த ஜப்பானிய நடிகை யூகோ டக்யூச்சி நேற்று (27) தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
40 வயதுடைய யூகோ டக்யூச்சி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த போது, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இவரை அவரது கணவன் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், சிகிச்சைப் பலனின்றி அவர் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தை போலவே இவரது அறையிலும் தற்கொலை கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. பிரபல நடிகையின் மரணம் தொடர்பாக அவரது கணவர் டைக்கி நகாபயாஷியிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்குள் எந்தவித சண்டையும் இல்லை என அவர் தெரிவித்துள்ள நிலையில், திரைத் துறையில் பிரச்சனையா? யாராவது மிரட்டல் விடுத்தனரா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் தான் நடிகை யூகோ டக்யூச்சிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2005ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.