இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் நன்றி தெரிவித்துள்ளது!

இலங்கை யாழ்பாணம் அல்லப்பட்டி கடற்கரையில் கரை ஓதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இலங்கையில் இருந்து சர்வதே கடல் எல்லை வழியாக மீனவரின் சொந்த ஊரான தங்கச்சி மடம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உடலை தாயகம் எடுத்துவர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவரின் உறவினர்கள் நன்றி தெரிவித்துகொள்கிறோம் என ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்’ ஜேசுராஜா தெரிவித்தார்.

கடந்த புதன் கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று புதன் கிழமை இரவு கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தீடீரென கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, படகிலிருந்து கார்சன் என்ற மீனவர் நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்து மாயமானார்.

இந் நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை, யாழ்ப்பாணம் வேலணை பகுதிக்கு உட்பட்ட, அல்லப்பிட்டி -வெண்புறவிநகர் கடற்கரையில் மீனவரின் உடல் கரை ஓதுங்கியது.

பின்னர் உடலை மீட்ட ஊர்காவல்துறை பொலிசாரால் உடற் கூறு ஆய்வுக்காக யாழ்பாணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடலை புகைப்படம் எடுத்து யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் மூலம் தங்கச்சிமடத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களுக்கு அனுப்பபட்டு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று மீனவர் கார்சனின் உடல், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் இன்று அதிகாலை இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீனவரின் உடலை கப்பல் மூலம் தாயகம் திருப்பி அனுப்ப காங்கேசன் கடற்படை முகாமில் உள்ள கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கிருந்து இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தது.

இந் நிலையில் இலங்கை அரசாங்கம், கடற்படை மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்த இந்த உதவிச் செயற்பாட்டிற்கு தமது நன்றிகளை தெரிவித்த ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்’ ஜேசுராஜா, குறித்த மீனவரின் உடல் அவரது சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு கொண்டு வரப்பட்டு பின் தகனம் செய்யப்பட்டதாகவும், மீனவர் கார்சன் உடல் தாயகம் எடுத்து வர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கும், இலங்கை காவல் துறையினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும், மற்றும் தமிழக அரசுக்கும் கடற்படையினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.