தேசிய பொலிஸ் ஆணையகத்தின் ஒப்புதலின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவை தேவைகளின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி 08 பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவர், பிரதி பொலிஸ் அத்தியேட்சகர் ஒருவர் மற்றும் 03 உப பொலிஸ் அத்தியேட்சகர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன இதுவரை ஊடகப் பேச்சாளர் பதவியினையும் வகித்த நிலையிலேயே, குறித்த பதவிக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஜாலிய சேனாரத்ன வட மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் காலி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய கே.என்.ஜெ. வேதசிங்க மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.