தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கு முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வருகையை அடுத்து ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்திருந்தார்.
இன்று (17) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகவிருந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தரவுள்ளார் என்ற தகவலை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக தமிழ் கட்சிகளின் இன்றைய கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.