நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 38 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 79 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பேலியகொடை மீன்சந்தை விற்பனையாளர்கள் 49 பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 44 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 501 ஆக உயர்வடைந்துள்ளது.