மட்டக்களப்பில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

02 2
02 2

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் பிரதான வியாபாரி ஒருவர் நேற்று(27) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை காவல்துறை நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் பிறைந்துரைச்சேனை பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 37 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.