ஹட்டன் நகரில் மென்டிஸ் மாவத்தை ஊடாக சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துத் கொண்டு தப்பியோடிய சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் காவல்துறை இன்று (05) கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த 2 ஆம் திகதி ஹட்டன் நகருக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டமை தொடர்பில் குறித்த பெண் ஹட்டன் காவல்நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்த பின்னர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஹட்டன் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா காட்மோர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.