அத்தியாவசிய பொருட்களுடன் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை!

மரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று (05) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார மையங்களை, மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதனை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.