இலங்கை – இந்திய மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு உயர் மட்டப்பேச்சு வார்த்தைகள் எதிர்வரும் 16 ஆம் மற்றும் 23 ஆம் திகதி காணொலி மூலமாக இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பல மட்டங்களில் இடம்பெற்றிருந்தன.
விசேடமாக மீனவர்கள் அத்துமீறல்கள், சட்டவிரோத மீன்பிடி முறையை, உபகரணங்களைப் பயன்படுத்துதல், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்தல் என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள விடயங்களை நடைமுறை ரீதியாக செயற்படுத்தவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே அது தொடர்பாக உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதில் குறிப்பாக, 16 ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்புக்கள், அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் இடம் பெறவுள்ளதோடு அதற்கு அடுத்தபடியாக நடைபெறவுள்ள சந்திப்பானது, இந்திய இலங்கை மீனவர்கள் இணைந்த செயற்குழு மட்டத்திலும் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்புகள் தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்கும் பெரிதும் உதவியாக அமையலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெகு விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பொன்றை நடத்துவது தொடாபில் ஆராய்ந்து வருதாக கடற்றொழில் அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.