பொருளாதார மத்திய நிலையத்தை பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு நாமலிடம் கோரிக்கை!

வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படாமலிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு வவுனியாவிற்கு நேற்று வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .


நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் நகரிலுள்ள வர்த்தகர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது . இதன்போது , அங்கு கலந்துகொண்ட வர்த்தக பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மதகுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் அதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை . 
பாவனையற்று காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது .

இதையடுத்து அது குறித்து தொடர்புபட்ட துறையினருடன் கலந்துரையாடி மிக விரைவில் திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சாவினால் வர்த்தகப்பிரதிநிதிகளுக்கு உறுதியளித்துள்ளார் .

 
இதில் கலந்து கொண்ட வர்த்தக பிரதிநிதிகள் பழைய பேருந்து நிலையம் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களின் செயற்பாடுகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .