சித்தாத்தன் பெயரில் விசமிகளின் கைவரிசை – கஜதீபன் குற்றச்சாட்டு

kajatheepan
kajatheepan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தனின் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி புலிகளுக்கு எதிரான பதிவு இடப்பட்டதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தர்மலிங்கம் சித்தாத்தன் என்ற பெயரிலான முகபுத்தக பக்கத்தில் இராணுவத்தினருடன் இணைந்து விடுதலைப் புலிகள் தங்கள் தோழர்கள்மீது தாக்குதல் நடாத்தி இருபது பேரின் இறப்புக்கு காரணமாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டி பதிவொன்று இடப்பட்டிருந்தது.

அப்பதிவு தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான கஜதீபனுடன் தொடர்புகொண்டு கருத்துக்கேட்டபொழுது, அந்தப் பக்கமானது தர்மலிங்கம் சித்தாத்தனாலோ, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் இயக்கப்படும் தளம் அல்ல என்றார்.

ஆனாலும் குறித்த முகநூல் பக்கமானது யூலை 20, 2015 ஆரம்பிக்கப்பட்டு 4,224 பின் தொடர்கிறார்கள். இதுவரை தர்மலிங்கம் சித்தாத்தன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செய்திகளே பகிரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.