விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்கவைக்க சஜித் கடும் முயற்சி – திலங்க சுமதிபால

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1

“தந்தையின் வழியில் செல்வதாகப் பிரசாரம் செய்யும் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே முயற்சிக்கின்றார். அதனை யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

வடகொழும்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக இதுவரை காலமும் மத்திய கொழும்பு இருந்தது. ஆனால், இம்முறை தேர்தலில் அதன் வரலாறு மாறப்போவது நிச்சயமாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து செயற்படும் சஜித் அணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதைவிட கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அதிகாரத்தைக் கைப்பற்றவே முயற்சிக்கின்றது.

ரணசிங்க பிரேமதாஸ நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்போது தமிழீழ விடுதலைப்புகளுக்கு ஆயுதம் வழங்கியதை ஐக்கிய தேசிய கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க இடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மேலும் சக்தி பெறச்செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாங்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் கடந்த காலங்களில் கொழும்பு நகரில் எங்களால் விடுபட்ட குடிசை வீடுகளை அகற்றிவிட்டு, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துவோம். அதன் மூலம் கொழும்பில் குடிசை வீடு என்ற நாமத்தையே இல்லாமலாக்குவோம்” – என்றார்.