கிளிநொச்சில் இடம்பெறும் விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்!

Untitled
Untitled

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் 70 வீதமானோர் இளவயதுடையவர்கள் என கிளிநொச்சி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”அண்மை நாட்களாக விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக ரிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களாலேயே அதிகளவான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 70 வீதமானவர்கள் இள வயதுடையவர்களாக காணப்படுகின்றார்கள் என அவர் தெரிவித்தார். இதேவேளை இளவயதுடையவர்களே அதிகளவில் காயங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலே விபத்துக்களால் உயிரிழந்தவர்களது உடல் அங்கங்கள் உரிய உடல் கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றது. அவர்களில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என இதுவரை பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் போதைப்பொருள் பாவனையின் பின்னர் வாகனங்களை செலுத்தினர் என்பது தொடர்பில் தெரிவிக்க முடியாது எனவும் உயிரிழந்தவர்களின் உடல் கூற்று பரிசோதனைகள், இரத்த மாதிரிகைகளில் அவ்வாறு பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சாரதிகளும் பொது மக்களும் விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே தவிர்க்க முடியும் எனவும் அவர் இதன்போது தெரி்வித்தார்.