புலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி:சரா!

சரவணபவன்
சரவணபவன்

இடித்துரைக்கிறார் சரவணபவன்

தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது தனியே அந்தக் கட்சியின் வெற்றிமட்டுமல்ல. மாறாக தமிழ் மக்களினதும், தாயக தேசத்தினதும் வெற்றியாகவே கணிக்கப்படும்.

அதேநேரம் கூட்டமைப்பின் வெற்றி என்பது ராஜபக்சக்களின் – சிங்கள பேரினவாதிகளின் தோல்வியாகவும் கருதப்படும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

பண்டத்தரிப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு அப்போதைய அரசியல் சூழலில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை உணர்ந்து இந்த உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் இன்று பலர் பலதையும் கூறலாம். ஆனால் தாயக தேசத்து மக்களுக்கு கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்ற உண்மை தெரியாததொன்றல்ல. 2004ஆம் ஆண்டு கூட்டமைப்புக்கான ஆதரவை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியிருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக் கொண்டிருந்தது.
சிங்களவர்களுக்கும், ஆட்சியிலிருக்கும் ராஜபக்சக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாகத் தோற்கடித்ததை பெரும் வெற்றியாகக் கொண்டாடுகின்றார்கள்.

அவர்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரேயொரு தேவை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அரசியல் ரீதியாக செயற்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத, அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்து விட்டோம் என்று மார்தட்ட முடியும். அதற்காகவே கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு ராஜபக்சக்கள் தலையால் நடக்கின்றனர்.

ராஜபக்சக்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவர்கள் விரும்பும் வகையில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க இங்கே பல கோடரிக்காம்புகளும் களமிறங்கியிருக்கின்றன.

மக்களே! பாலும், கள்ளும் நிறத்தால் ஒன்று. ஆனால் அதன் தரமும் சுவையும் வௌவேறானவை. தமிழ்க் கூட்டமைப்பு போல் வேடமிட்டு களமிறங்கியுள்ள புல்லுருவிகள் தொடர்பில் விழிப்பு அவசியம். இல்லையேல், தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்டயுகத்துக்குள் தான் தள்ளப்படும். ராஜபக்சக்களின் விருப்பத்தை தமிழ் மக்கள் நிறைவேற்றப் போகின்றனரா? இல்லை ராஜபக்சக்களைத் தோற்கடிக்கப் போகின்றனரா?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார் சரவணபவன்.