58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வறட்சியினால் பாதிப்பு

Varatchi
Varatchi

நாட்டில் நிலவி வரும் வறட்சியான சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நிலத்தடி நீர் குறைவடைந்தும், ஆறுகள், குளங்கள், நீர்நிலைகள் நீர் வற்றியும் மக்களுகான குடிநீர் பற்றாக்குறை நிலவிவருவதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 915 பேர் வறட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் குடிநீர் விநியோகம் பௌசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 553 பேரும், கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் பகுதியில் 236 குடும்பங்களைச் சேர்ந்த 831 பேரும், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1264 பேரும், கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 1751 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 810 பேரும் இவ்வாறு குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 694 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 783 பேரும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6001 குடும்பத்தைச் சேர்ந்த 19 ஆயிரத்து 971 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்தி 190 பேரும் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி அதிகார சபைகள் உதவியுடன் 33 பவுசர்கள் மூலமாக நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் வறட்சிக் காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கலாமென வளிமண்டல திணைக்களத்தின் எதிர்வு அறிக்கைக்கமைய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.