சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிப்பதில் தாமதம்

6 L
6 L

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிப்பதில் தாமதம் குறித்து நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் சீராக, சரியான நேரத்தில் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் அவருக்கு கடிதம் எழுதியதாகவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், இந்த திட்டத்திற்கு 2.7 பில்லியனை ஒதுக்கிய போதிலும், கடந்த அரசாங்கம் சீருடைகளை விநியோகிக்கத் தவறியது வருந்தத்தக்கது என தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சீருடைக்கான பொருட்களை வாங்குவதற்கான வவுச்சர்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இவ்வாறு அச்சிடப்பட்ட வவுச்சர்கள் அனைத்தும் மூன்றாவது தவணை கல்வி நடவடிக்கை டிசம்பரில் முடிவடையும் போது விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட டளஸ் அழகப்பெரும, நேரமின்மையைக் காரணம் காட்டி, மூன்றாவது தவணை கல்விக் காலம் அடுத்த வெள்ளிக்கிழமை முடிவடைவதற்கு முன்னர் வவுச்சர்களை வழங்க முடியாது என தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த ஆண்டு முதல் தவணை ஆரம்பமாகும்போது அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.