மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் கட்சிக்காக உழைத்த பல தமிழ்த் தேசியவாதிகளை ஓரம் கட்டி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளராக இருந்த சாணக்கியன் என்பவருக்கு வேட்புமனு அளிக்கப்பட உள்ளது. இந்த விடயமானது கட்சி மட்டத்தில் புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சாணக்கியனுக்கு இம்முறை எவ்வாறு தமிழரசுக் கட்சி சார்பில் ஆசனம் வழங்கப்படுகிறது என்பதை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்களை முன்வைக்கிறார்கள் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே தன்னை ஒரு வேட்பாளராக தானே அறிவித்துக்கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் தனது தேர்தல் பிரச்சார வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பாக அவர்கள் நண்பர்கள் தரப்பிலிருந்து சாணக்கியனிடம் வினவியபோது, சாணக்கியனின் நோர்வேயில் வசிக்கும் சித்தப்பா ஒருவரூடாக இரண்டு கோடி ரூபாக்கள்ஈ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு கொடுக்கப்பட்டு ஆசனப் பங்கீட்டைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவிக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் தமிழ்த் தேசியவாதிகளான அரியநேந்திரன் போன்றோரை ஓரம் கட்டி தேசியக் கட்சி விசுவாசிகளான சாணக்கியன் போன்றோருக்கு ஆசனம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பேச்சு கட்சி மேல்மட்டத்திடம் எடுபடவில்லை.
2010 ஆம் ஆண்டு மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் புலிநீக்க மற்றும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலைச் செயற்படுத்திவருகிறார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சாணக்கியனும் சுமந்திரனின் சிபாரிசுக்கு ஊடாகவே ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாணக்கியன் அவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.




