படித்த சமூகமொன்றை உருவாக்கி சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம்-ஜனாதிபதி

7
7

படித்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றத்தில் திங்கட்கிழமை மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவம் இடம்பெற்றது.
2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள் முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 587 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கற்றறிந்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்று சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அவர்கள் தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையின் ஆளுமை, நம்பிக்கை, இருப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தொழிநுட்ப யுகம் பற்றிய தமது அறிவையும் ஆசிரியர்கள் வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.