யானைகளின் மரணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவு

ST 20190608 ELEPHANTS08 4895583
ST 20190608 ELEPHANTS08 4895583

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் இடம்பெறும் மோதல் காரணமாக, உலகில் யானைகளின் மரணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச கணக்குகள் பற்றிய தெரிவுக்குழுவில் இ்ந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், யானை – மனித மோதல் காரணமாக உலகில் அதிகளவான மனித மரணங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் பதிவாகியுள்ளது.

யானை – மனித மோதல் காரணமாக உலகில் அதிகமான மனிதர்களின் மரணம் இடம்பெறும் முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யானை மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு 272 யானைகள் மரணிகின்ற நிலையில், கடந்த வருடம் 407 யானைகள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வருடமொன்றுக்கு 85 மனிதர்கள் மரணிக்கின்ற நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 60 ஆண்டு காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, தீர்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய முயற்சிகள் ஊடாக அதற்கு தீர்வைக் காணவேண்டும் என அரசு கணக்குகள் தொடர்பான குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு 3 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.