பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 379ஆக உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு நோயாளி மற்றும் இரு வைத்தியர்கள், இரு தாதிய உத்தியோகத் தர்கள் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே மரணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 550ஐத் தாண்டியுள்ள அதேவேளை மாகாணத்துள் வருகின்ற கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றுக்கள் 379ஆகும். எனவே ஏனைய 150 தொற்றுக்களும் ஏனைய 3 பிராந்தியத்துள் வருகின்றன.
கல்முனைப் பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 339பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மீதி 40பேரும் பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப் பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்தியத்தில் தனியொரு கிராமம் அதிகூடிய தொற்றுக்களைக் கொண்டது என்றால் அது 241தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.
அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 49 தொற்றுக்களாக உயர்ந்துள்ளது. சாய்ந்தமருதில் 17 பேர் ஆலையடிவேம்பில் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப் பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 72பேரும் அட்டாளைச்சேனையில் 80பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகி வருகிறது.
இதேவேளை கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை ஒரேயொரு கொரோனா இறப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.