வவுனியாவில் இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் புலம்பெயர் தேசத்திற்கு பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று(18) காலை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார்.
இதன்போது அண்மையில் வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் போது கடலில் மூழ்கி பலியான இரு இளைஞர்களுக்கும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், தமிழருவி த. சிவகுமாரன், சமூக ஆர்வலர்களான விக்னா, மாதவன், இராமச்சந்திரன், ஆலயத்தின் முகாமையாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.