மருத்துவ வல்லுநர்கள் எஸ்.ரவிராஜ், கீதாஞ்சலி சத்தியதாஸ் இருவருக்கும் பேராசிரியர் பதவி!

tgyjgjghgh 1 copy
tgyjgjghgh 1 copy

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்ற இரண்டாவது பேராசிரியர் என்ற பெருமையை சத்திரச் சிகிச்சை வல்லுநர் எஸ். ரவிராஜ் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ், 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி தொடக்கம் பேராசிரியர் பதவி பெற்றுள்ளார்.

அத்துடன், குழந்தை நல மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2019 ஏப்ரல் 29ஆம் திகதி தொடக்கம் பேராசிரியர் பதவியைப் பெற்றுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை இன்று சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையில் 2010ஆம் ஆண்டு முதல் முதுநிலை விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ், 2012ஆம் ஆண்டு அந்தத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்படை நிறைவு செய்த குழந்தை மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2003ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தை மருத்துவத் துறையில் விரிவுரையாளராகப் பதவி பெற்றார்.

அதன் பின்னர் அவர் 2010ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தை மருத்துவத் துறையின் முதுநிலைய விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்று சேவையாற்றி வந்துள்ளார்.

சத்திரச் சிகிச்சை வல்லுநர் எஸ். ரவிராஜ், குழந்தை மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ் இருவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பேராசிரியர் தேரிவுக்கான சகல தேவைப்பாடுகளையும் நிறைவு செய்துள்ள நிலையில் நடத்தப்பட்ட மூன்று நிலை நேர்முகத் தேர்வுகளிலும் தேறி பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றிருக்கிறார்.

இன்று 19ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இந்த ஆண்டு மூன்று மருத்துவ வல்லுநர்களுக்கு பேராசிரியர் பதவி வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் முதலாவது பேராசிரியராக பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன், 2018 நவம்பர் 29ஆம் திகதி முதல் பேராசிரியர் பதவி வழங்கி கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஒப்புதலளித்தமை குறிப்பிடத்தக்கது.