சரியான முறையில் முக கவசங்களை அணியவேண்டும் – அழகையா லதாகரன்

OIP 1
OIP 1

கிழக்கில் கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கல்முனை சுகாதார பிராந்திய சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 1058 பேர் கொரனா தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கோமரகடவில பகுதியில் ஒருவர்,கல்முனை வடக்கு பகுதியில் மூன்றுபேர்,கல்முனை தெற்கில் 26பேர், சாய்ந்தமருது,காரைதீவு,சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் ஒருவரும் காத்தான்குடி பகுதியில் நான்கு பேரும் வெல்லாவெளி பகுதியில் ஒருவரும் ஆரையம்பதியில் ஒருவர்,அம்பாறை தமன பகுதியில் ஒருவருமாக 41 தொற்றாளர்கள் 12மணித்தியாலங்களுக்குள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் திருகோணமலை மாவட்டத்தில் 126ஆக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 138ஆக அதிரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 794ஆகவும் அதிகரித்துள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் சுகுனன் தலைமையின் கீழ் நேற்று காவல்துறையினர் மற்றும் இராணுவத்துடன் இணைந்து கல்முனை பொதுச்சந்தையில் திடீர் என மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 27பேர் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் திருமலை நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தற்போதும் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. முருகாபுரி,ஜின்னா நகர்,அபேபுர ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவுள்ளன.அங்கு தொற்றின் தாக்கம் தொடர்பிலும் அதனை தடுக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.மூதூர் பகுதியிலும் தொற்றுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

யுத்த காலத்தில் அடையாள அட்டை எங்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ அதனைவிட முக்கியமானதாக அனைவரும் முககவசம் அணிவது முக்கியமாகும். முககவசங்கள் சரியான முறையில் அணியவேண்டும். வெளியில் செல்லும்போது பலர் நாடியில்தான் முககவசங்கள் அணிகின்றனர். சரியான முறையில் முக கவசங்களை அணியவேண்டும்.

முகத்தின் மூன்று பகுதிகள் கொரனா கிருமிகள் உடலுக்குள் செல்லும் மூன்று பிரதான காரணியாக அமைகின்றன. கண்,மூக்கு,வாய் ஆகியவற்றினை கைகளால் தொடுகின்ற பழக்க வழக்கங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.சமூக மற்றும் தனிநபர் இடைவெளிகளை நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும். இன்று சமூக இடைவெளிகளும் தனிநபர் இடைவெளிகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.சமூக இடைவெளி அதிகரிக்கும்போது தொற்றின் தாக்கம் குறைவடையும்.

தேக ஆரோக்கியமாக இருந்தாலும் கிருமிகளை உள்வாங்கிய போதிலும் உங்களுக்கு அதன் அறிகுறி தெரியாமல் இருக்கலாம்.ஆனால் உங்களின் குடும்பத்தினர்,வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தொற்றினை வழங்கும் சந்தர்ப்பத்தினை உருவாக்கிக்கொள்கின்றீர்கள்.எங்களால் வழங்கப்படும் சுகாதார நடைமுறைகளை மிகவும் காத்திரமாகவும் மிகவும் பொறுப்புடனும் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.