”இவ் வருட பாதிட்டு வேலை இவ்வாண்டுக்குள்” இரவும் இயங்கிய வலி கிழக்கு பிரதேச சபை

download 3 11
download 3 11

இன்றுடன் நிறைவுறும் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு முன்னெடுக்கப்படாதுள்ள அபிவிருத்தி வேலைகளை அவ்வாண்டுக்குள்ளேயே ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அலுவலகப் பணிகள் இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று சூழ்நிலைகளின் காரணமாகவும் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வருமதிகளின் தாமதத்தினாலும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கிடைக்கப்பெறும் அபிவிருத்திகளை பணம் திரும்பாது முன்னுரிமையில் மேற்கொள்ளவேண்டியிருந்தமையினாலும் சபையின் வேலைத்திட்டங்களில் ஒருபகுதி நிறைவுறுத்தப்படாது இருந்த நிலையில், அவ் அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய வருடத்திற்குள்ளே ஆரம்பிக்கப்பட்டால் அபிவிருத்திகளின் பயனை மக்கள் விரைவாக அனுபவிக்க முடியும் என்ற அடிப்படையில் இரவும் அலுவலகப் பணியாற்றி 44 புதிய அபிவிருத்தித் திட்டங்களை இவ்வாண்டின் இறுதிநாளில் ஆரம்பித்துள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு திட்டங்கள் பல்வேறு காரணங்களால் அவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்படாத திட்டங்கள் அடுத்த ஆண்டின் அறுதிக் கணக்கின் பின்னரே Nமுற்கொள்ளச்சந்தர்ப்பம் உள்ளது. இந் நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை 2020 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட எஞ்சிய வேலைகளையும் இவ்வாண்டுக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் மார்கழி மாத நடுப்பகுதியில் அவசர அவசரமாக கேள்வி அறிவித்தலை மேற்கொண்டிருந்தது.


அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கேள்வி அறிவித்தலின் பிரகாரம் கேள்வி திறக்கபட்டது. இந் நிலையிலேயே கேள்விக்குழுவின் தலைவர் தவிசாளர், சபை உறுப்பினர்கள், சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கேள்வித்திறத்தல் குழுவினர் கடமைநேரத்திற்கு புறம்பாக மேலதிகமாக இரவும் அலுவலகப் பணியாற்றி இவ்வருடத்தில் குறித்த வேலைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.