ஜனவரி மாதம் (இம்மாதம்) முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய ஆண்டில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்றையும், தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.