யாழ்ப்பாணம் அரியாலை பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியாலை பூங்கங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத 24 வயதுடைய பெண், நேற்று (வியாழக்கிழமை) அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையின்போது, குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதன்போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு, அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வீட்டிற்கு சட்ட வைத்திய அதிகாரி, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மற்றும் காவல்துறையினர் சென்று புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை கண்டெடுத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.