முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2021ம் ஆண்டிற்கான புதுவருடத்தினை வரவேற்றல் மற்றும் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01) மு.ப 9.00மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம் இடம்பெற்ற இந் நிகழ்வில் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றலுடன் அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைப்பு இடம்பெற்றுள்ளது.
தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் அரச சேவை சத்தியப்பிரமானம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் புதுவருடப்பிறப்பை நினைவு கூரும் முகமாக பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாவட்ட செயலக வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரதான சுகாதார பிரச்சினையான கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் உள்ள பொறுப்புக்களை வலியுறுத்தும் முகமாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வே.ஸ்ரீராம் அவர்களின் உரை இடம்பெற்றது.
சுபீட்சமான இலங்கையினுள் பயனுள்ள பிரஜைகளை, மகிழ்வான குடும்பங்களை, பண்பாடான ஒழுக்கமுள்ள நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கான ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை நேர்மையாக, தாமதமின்றி, கடும் அர்ப்பணிப்புடன் வழங்கும் தேவையினை வலியுறுத்தம் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரின் உரை இடம்பெற்றது.
இறுதியாக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் அடங்கலான குழுவினர் ஒவ்வொரு கிளைகளுக்கும் சென்று வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்