குரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை!

i1
i1

மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேயிலை மலைகளில் தொழில் புரியும் இவர்கள் தமது பகல் உணவை, காலையிலே தயாரித்து விட்டு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் உணவுகளை, மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி வாழும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உண்டு விட்டு செல்வதாக குறிப்பிடுகின்றனர்.

இதனால் பாடசாலை முடிந்து வரும் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, நகரங்களில் உள்ள கடைகளுக்கும் சென்று உணவு வகைகளை எடுத்து செல்வதாகவும், கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி காணப்படும் சிறிய காட்டு பகுதிகளில் இருந்தே குரங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை என இம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இந்நகர வர்த்தகர்கள் மற்றும்  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.