வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

DSC08800
DSC08800

அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (02) காலை 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற போரில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு வருகிறார்கள்.

அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் யுத்தம் முடிவுற்று பதினொரு வருடங்கள் கடந்தும் விசாரணை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமறுப்புச் செயற்பாடாகும்.

‘காலம்தாழ்த்தி வழங்கப்படும் நீதி ,நீதி மறுப்புக்குச் சமனாகும்’ என்பதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும். எனவே அனைத்து அரசியல் கைதிகளையும் எதுவித நிபந்தனையும் இன்றி பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோருகின்றோம்.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான, நி.பிரதீபன்,டொன்பொஸ்கோ, கட்சி உறுப்பினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராயா, ரேகன், புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பே கிடையாதா, கைதிகளை விடுதலைசெய், முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களிற்கு பதில் என்ன கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.