கொழும்பிலிருந்து தப்பிவந்த பூநகரியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா!

kovid
kovid

வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள், 7 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்கள் 11 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

பூநகரியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் அந்த விடுதியில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டன. அதனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து பூநகரிக்கு திரும்பி வந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தப்பி வந்தமை தொடர்பில் கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அத்தோடு மூவருக்கு தொற்று உள்ளமை தொடர்பிலும் கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ள மூவரையும்கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் ஏனைய 8 பேரையும் சுயதனிமைப்படுத்தியிருந்தனர்.

அவர்கள் 8 பேரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. 7 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதங்கேணியில் கொழும்பு சென்று திரும்பிய இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று 248 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.