தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்களை இன்று (08) காவல்துறையினர் மடக்கி பிடித்து அவர்களுக்கு சுகாதார உத்தியோகத்தர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் திகதியில் இருந்து எதிர்வரும் 15 ம் திகதிவரை காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் இந்த பகுதியில் சட்டத்தை மீறி பலர் வீதிகளில் நடமாடி வருகின்றனர் என குற்றச்சாட்டுக்கள் மாவட்ட கொரோனா செயலணியில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினரின் இறுக்கமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் காவல்துறையினர் வீதிகளில் நடமாடி திரிபவர்களை மடக்கிபிடித்து அவர்களை அந்த இடங்களிலுள்ள வீதிகளில் வைத்து சுகாதார அதிகாரிகள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.