மன்னாரில் வர்த்தக நிலையங்கள் மீது காவற்துறையினர் சட்ட நடவடிக்கை!

LOCAL 6
LOCAL 6

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இன்று சனிக்கிழமை காலை மன்னார் காவற்துறையினர் சட்ட நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர்.

தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ‘கொரோனா’ தொற்றாளர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த  நிலையில் மக்களை உரிய சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்குமாறு  காவற்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக மன்னார் காவற்துறையினர் மேற்படி சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் , உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். 

குறிப்பாக முகக்கவசம் அணியாத வர்த்தகர்கள், கிருமி தொற்று நீக்கிகள் மற்றும் வடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் ஒரு சில வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாமல் நடமாடும் பொது மக்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மன்னார்காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.