கொவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த மேலும் 288 இலங்கையர்கள் ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸிலிருந்து இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற சிறப்பு விமானத்தில் இவர்கள் இன்று அதிகாலை 5.55 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
திருப்பி அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்தும் செல்லப்பட்டனர்.